Published : 14 May 2020 07:24 AM
Last Updated : 14 May 2020 07:24 AM

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறுஅடக்கம் செய்யக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தனியார் மருத்துவமனை இயக்குநரும் நரம்பியல் மருத்துவருமான சைமன் ஹெர்குலஸ், கரோனா நோய்த் தொற்றால் இறந்தார். இவரது உடலைஅடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அப்பகுதியில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு, அண்ணாநகர் வேலங்காடு மயானத்துக்கு கொண்டு சென்றபோது அங்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தனது கணவரின் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டியெடுத்து மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக்கோரி மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர், தமிழக டிஜிபி, சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x