Published : 13 May 2020 10:06 PM
Last Updated : 13 May 2020 10:06 PM
வாணியம்பாடியில் நடவடிக்கை என்ற போர்வையில் பழவியாபாரிகள் கடைகளை சூறையாடிய நகராட்சி ஆணையர் கடும் எதிர்ப்பு காரணமாகவும், மனித உரிமை ஆணைய வழக்கு காரணமாகவும் காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் நேற்று வெளியான காணொலி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக்காணொலியில்வாணியம்பாடி உழவர்சந்தை அருகில் உள்ள சி.எல்.சாலை பகுதியில் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடந்துக்கொண்ட விதம் பதிவாகியிருந்தது.
சாதாரண விளிம்பு நிலையில் உள்ள மார்க்கெட் பழ வியாபாரிகள் பழம் அடுக்கி வைத்திருந்த மேடையை தட்டி விட்டு சாலையில் வீசி எரிவதும், பழக்கடை தள்ளுவண்டியை பழத்தோடு சாலையில் சாய்த்ததும், பழங்களை அள்ளி சாலையில் வீசுவதும் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் வில்லன்கள் செய்வது போன்று ஒரு காட்சி நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் அதிர வைத்தது.
அதிகாரி என்பதால் அவர் தங்களுக்கு ஏற்படுத்திய நஷ்டத்தை சகித்துக்கொண்டு உள்ளூர வெம்பியபடி சாலையில் கொட்டிக்கிடக்கும் பழங்களை அள்ளும் பெண் வியாபாரியை அலட்சியமாக பார்த்தப்படி அந்த அதிகாரி வீர நடை போட்டு செல்லும் காட்சி காண்போரை உஷ்ணப்படுத்தியது.
காணொலியை பார்த்தோர் அந்தக்காணொலியை முதல்வரின் ட்விட்டர் அக்கவுண்டுக்கு டேக் செய்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலியை பதிவு செய்து கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
“எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க இவருக்கு யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”. என கோபப்பட்டு பதிவிட்டிருந்தார்.
எதிர்ப்பு வலுக்கவே அதிர்ந்துபோன நகராட்சி ஆணையர் உடனடியா சால்வையுடன் வட்டாட்சியர், டிஎஸ்பி சகிதமாக சென்று அனைத்து வியாபாரிகளிடமும் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து (suo-moto)வழக்குப்பதிவு செய்து கடுமையாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
மாநில நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டிஸில் மனித உரிமை ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உரிய விளக்கத்தை 2 வார காலத்துக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
* வாணியம்பாடி சந்தையில் பழ வியாபாரிகள் விதியை மீறி கடைகளை வைத்திருந்தால் அதன் மீது சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அங்குள்ள பொருட்களை அழித்துள்ளார்.
* இது அங்குள்ள ஏழை பழ வியாபாரிகளுக்கு எதிராக நகராட்சி நிர்வாக ஆணையர் எடுத்த மனித உரிமை மீறல் நடவடிக்கை ஆகும்.
*இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?
இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிகார மீறல் சர்ச்சையில் சிக்கிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குபதிலாக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபுவை, வாணியம்பாடி நகராட்சி ஆணையராக (பொறுப்பு) நியமனம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT