Published : 13 May 2020 08:22 PM
Last Updated : 13 May 2020 08:22 PM

பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர் அறிவிப்பு தகர்த்துவிட்டது: முத்தரசன் விமர்சனம்

பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர் அறிவிப்பு தகர்த்துவிட்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி தொலைக்காட்சி வழியாக 5-வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது, கரோனா நெருக்கடி காலத்தைச் சமாளித்து, முன்னேற மத்திய அரசு ரூபாய் 20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என ஆரவாரமாக முழங்கினார். முழுமையான விவரங்களை இன்று நிதியமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

நிதியமைச்சர் ஊக்குவிப்பு திட்டத்தை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்தது. மாலை 4 மணிக்கு நிதியமைச்சரும், இணை நிதியமைச்சரும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கத் தொடங்கினர்.

இந்திய அரசின் ரூபாய் 200 கோடி மதிப்பு வரையான பணிகளின் ஒப்பந்த ஏலத்தில் சர்வதேச ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்து, உள் நாட்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிவு எடுத்துள்ளது.

சிறு, குறு தொழில்கள் முதலீட்டு வரம்புகளை திருத்தி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே இருந்த முதலீட்டு வரம்பில் இருக்கும் சிறு, குறு நிறுவனங்கள், அவற்றை விட அதிக முதலீட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.

மின்சார நிறுவனங்களுக்கு ரூபாய் 90 ஆயிரம் கோடியும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்க ரூபாய் 30 ஆயிரம் கோடியும், வாராக் கடன்கள் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் வழங்க ரூபாய் 50 ஆயிரம் கோடி, ஊரடங்கு காலத்தில் நஷ்டம் அடைந்த நிறுவனங்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி, சிறு, குறு தொழில்களுக்கு பிணையில்லா கடன் ரூபாய் 3 லட்சம் கோடி வழங்கப்படும், பிபிபி திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் தருவது, வரி செலுத்த கால அவகாசம், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எஃப். தொகையை 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து அரசு செலுத்தும், இதற்காக ரூபாய் 6 ஆயிரத்து 500 கோடி செலவாகும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

பிரதமரின் அறிவிப்பு ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சர் அறிவிப்பு தகர்த்துவிட்டது. 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது' போல் வங்கி உத்தரவாதத்தை நீட்டிப்பது, கடன் வழங்குவது என்ற அறிவிப்புகள் மட்டுமே இருக்கின்றன. இவை நடைமுறையில் பெரும் பயனளிக்காது என்பதே கடந்த கால அனுபவமாகும்.

இந்த அறிவிப்பில் இரண்டு மாதங்களாக வேலை இழந்து, வருமானம் இல்லாமல் துயர நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்கள், ஊர் திரும்ப வேண்டும் என 50 நாட்களுக்கு மேலாக நெடுஞ்சாலைகளில், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில், கதறி அழுது வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள், ஜவுளித்துறையில் கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, ஆயத்த ஆடை தொழில்கள் போன்ற பெரும் பகுதியின் உணர்வுகளை நிதியமைச்சர் பிரதிபலிக்கவில்லை.

'கன்னித் தீவு' கதை போல் அறிவிப்புகள் தொடரும் என்ற மற்றொரு அறிவிப்பு தவிர நிதியமைச்சரின் அறிவிப்புகளில் வேறு எதுவும் இல்லை. நிதியமைச்சர் ஊக்குவிப்பு ஊறுகாய் அளவுக்கும் உதவாத ஏமாற்றம், பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது" என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x