Published : 13 May 2020 06:29 PM
Last Updated : 13 May 2020 06:29 PM

கமலாத்தாள் பாட்டிக்குப் புகழாரம் சூட்டியுள்ள முகமது கைஃப்

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது கைஃப்.

கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85). இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். வடிவேலம்பாளையம் பகுதியில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்றால் மிகவும் பிரபலம்.

25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யத் தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

தற்போது கரோனா ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். மேலும், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் விலையேற்றத்தால் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்க முடியாமல் இவர் தவிப்பதாகச் சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதை அறிந்து பலரும் கமலாத்தாள் பாட்டிக்கு உதவிகள் செய்தார்கள். இதனால் மீண்டும் சமூக வலைதளத்தில் கமலாத்தாள் பாட்டி வைரலாகி இருக்கிறார்.

இவரைப் பற்றி இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது கைஃப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"கே கமலாத்தாள் என்கிற 85 வயதுப் பெண்மணி, தமிழ்நாட்டில், கடந்த 30 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்றுக் கொண்டிருக்கிறார். ஊரடங்கிலும் கூட. நஷ்டம் ஏற்பட்டாலும், 'பல புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு சிக்கிக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்காக' என்கிறார். இவரது தன்னலமற்ற சேவை நமக்கு உத்வேகத்தைத் தருகிறது".

இவ்வாறு முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x