

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம் வழக்கையும் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் டாஸ்மாக் மது விற்பனை தொடர்பாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அவரது கோரிக்கை மனுவில், “டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்குபவர்களுக்கு உரிய ரசீது அளிக்கப்படுவதில்லை, மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. விற்பனை தடை செய்யப்பட்ட நாட்களில் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் கூட மது அருந்துவதைப் பார்க்க முடிகிறது. இதைத் தவிர்க்க கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண் அறிவிக்க வேண்டும்.
மது விற்பனை செய்ய ஒரு மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை அரசு தொடங்க வேண்டும். மதுபானக்கடைகளில் ரொக்க விற்பனையைத் தடை செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் டாஸ்மாக் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து உத்தரவிடக் கேட்க முடியாது என்று தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாராருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து அபராதத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.