தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் ஒரு அலகில் பழுது: 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் ஒரு அலகில் பழுது: 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Updated on
1 min read

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு அலகு பழுதான நிலையில் தற்போது மேலும் ஒரு அலகில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தின் மின் தேவை குறைந்ததால் இந்த அனல்மின் நிலையத்தில் கடந்த மாதம் 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு, மின் தேவை அதிகரித்தால் அனைத்து அலகுகளிலும் மீண்டும் முழு அளவில் மின் உற்பத்தி தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

இதனால் 5-வது அலகை தவிர மற்ற 4 அலகுகளிலும் கடந்த சில நாட்களாக முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 5-வது அலகு மட்டும் பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2-வது அலகில் நேற்று முன்தினம் இரவு 7.03 மணியளவில் கொதிகலன் குழாயில் திடீரென ஓட்டை விழுந்து பழுது ஏற்பட்டது. இதனால் இந்த அலகில் மின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 420 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

2-வது அலகில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரிரு நாளில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in