22 நாட்களுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்தில் கரோனா: 27 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது

22 நாட்களுக்கு பிறகு சிவகங்கை மாவட்டத்தில் கரோனா: 27 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் 22 நாட்களுக்கு பிறகு 27 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 22 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர் குணமடைந்தனர். இந்நிலையில் நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் மீதமிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை மூன்று பேரும் குணமடைந்தனர்.

அவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள், முகமதுரபீக் பொன்னாடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் காசநோய் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 22 நாட்களாக கரோனா தொற்று இல்லாதநிலையில் தற்போது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி கூறும்போது, "கரோனா பாதித்தவர் வசிக்கும் கல்லுப்பட்டறை பகுதியில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in