Published : 13 May 2020 01:14 PM
Last Updated : 13 May 2020 01:14 PM

மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று (மே 13) வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 24-ம் தேதி முதல் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியது. இந்தத் தடை உத்தரவால் அனைத்துத் தரப்பு மக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது.

ஆனால், தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை. அவர்களை நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும் அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல தொழில்களைச் சேர்ந்த அனைவருக்குமே தமிழக அரசு உரிய சலுகைகளை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்க தொழில் தொடங்கக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில், நலவாரிய உறுப்பினர்களுக்குக் கிடைத்த அரசின் உதவியும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. 144 ஊரடங்கு உத்தரவால் கடந்த 49 நாட்களுக்கும் மேலாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், ஆன்மிக வழிபாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறாததால் வருமானம் இல்லாமல் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்குக் கூட இலவச எண்ணில் பேசினால் உடனடியாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவித்தது. அதேபோல், நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத இந்தப் புகைப்படக் கலைஞர்களுக்கும் நிவாரணத் தொகையை தமிழக அரசு அளித்திருக்கலாம்.

எனவே, இவர்களின் வறுமையைக் கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும், நலவாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், தொழிலைத் தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x