Last Updated : 12 May, 2020 05:37 PM

 

Published : 12 May 2020 05:37 PM
Last Updated : 12 May 2020 05:37 PM

ராமநாதபுரத்தில் வட மாநிலத்தவர் போராட்டம்: சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிஷா அஸ்ஸாம், மேற்குவங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் 3000-க்கும் மேற்பட்டோர், உணவகங்கள், கட்டிடப் பணி உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கின்றனர்.

இவர்கள் கரோனா ஊரடங்கால் வேலையின்றி உள்ளனர். அதனால் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்வதாகக் கூறி இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 40-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.

வடமாநில தொழிலாளர்கள் கூறும்போது, ஊரடங்கால் வேலையின்றி தவிக்கிறோம். உணவுக்கும் கஷ்டமாக உள்ளது. அரசு எங்களுக்கு அரிசி மட்டும் தருகிறது.

மற்ற தேவைகளுக்கு பணம் இல்லாததால் சிரமமாக உள்ளது. அதனால் சொந்த மாநிலங்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

இந்நிலையில் கேணிக்கரை போலீஸார் வட மாநில தொழிலாளர்களை ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x