ஊரடங்கு நீங்கிய பின்  1 மாத சிறப்புப் பயிற்சிக்குப் பிறகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; முத்தரசன் கோரிக்கை 

ஊரடங்கு நீங்கிய பின்  1 மாத சிறப்புப் பயிற்சிக்குப் பிறகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு; முத்தரசன் கோரிக்கை 
Updated on
1 min read

பல்வேறு காரணங்களால் மன உளைச்சலில் மாணவர்கள் உள்ள நிலையில், ஊரடங்கு நிலை நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், ஒரு மாத காலம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, தேர்வுக்குச் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் ஜூன் முதல் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கரோனா நோய் பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைகள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் பொதுமக்கள் மத்தியில் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 52 நாட்களாக வேலையும், வருமானமும் இழந்து குடும்ப வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. இதில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட மாணவர்கள் பள்ளியில் படித்த பாடத்தை மறுபடியும் ஒரு மீள் பார்வையிட்டு, படிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நிலை நீங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பியதும், ஒரு மாத காலம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தேர்வுக்குச் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

எனவே அவசரப்பட்டு தற்போது அறிவித்துள்ள தேர்வுத் தேதிகளை மறுபரிசீலனை செய்து, மாணவர்கள் தேர்வு எழுதும் உகந்த சூழலில் தேர்வு நடத்த தேர்வுத் தேதிகளை மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in