Published : 12 May 2020 02:51 PM
Last Updated : 12 May 2020 02:51 PM

ஓசூர் வனச்சரகத்தில் சேற்று நீரை குடித்த பெண் யானை உயிரிழப்பு

உரிகம் வனச்சரகம் பிலிகல் காப்புக்காட்டில் உயிரிழந்த பெண்யானைக்கு மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் பிரேத பரிசோதனை பணியில் ஈடுபட்டுள்ள கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் குழுவினர்.

ஓசூர்

ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள உரிகம் வனச்சரகத்தில் சேற்று நீரைக் குடித்த 16 வயதான பெண் யானை ஒன்று உடல் நலமின்றி உயிரிழந்தது.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, சூளகிரி, உரிகம், ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தமிழக எல்லைப் பகுதியில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டியவாறு உரிகம் வனச்சரகம் அமைந்துள்ளது. உரிகம் வனச்சரகத்தில், பிலிகல் காப்பக்காடு பீர்னப்பள்ளி உட்பிரிவு, கடத்தூர்பட்டி வனத்தில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், உடனடியாக உரிகம் வனச் சரகருக்கு தகவல் அளித்துள்ளனர். வனச்சரகர் மூலமாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மாவட்ட வன அலுவலர் ஆர்.பிரபு பெண் யானை உயிரிழந்திருப்பதை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்பு கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் குழுவினர் மூலமாக உயிரிழந்த பெண் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது, ''பிலிகல் காப்புக்காட்டில் உயிரிழந்துள்ள 16 வயதான பெண் யானையின் உடலில் காயம் எதுவும் காணப்படவில்லை.

மாவட்ட வன அலுவலர் ஆர்.பிரபு மற்றும் வனவிலங்குகள் ஆர்வலர் சஞ்சீவ் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யானை காப்புக்காட்டு பகுதியில் உள்ள சேற்று நீரைக் குடித்ததால் உடல் நலமின்றி இறந்துள்ளது தெரியவந்துள்ளது''. இவ்வாறு வனச்சரகர் வெங்கடாசலம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x