கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்ட காவலர், ஆய்வாளருக்கு அரசு நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்ட காவலர், ஆய்வாளருக்கு அரசு நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

கூடங்குளத்தில் போராட்டம் நடத்திய வெளிமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவலர், ஆய்வாளர் இருவருக்கும் அரசு நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இதுவரை, சுமார் 13,000 வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மே 9 அன்று அணுமின் நிலைய வாயில் அருகில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்தத் தெழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாகச் செல்ல வேண்டும் என்று கோஷமிட்டனர்.

அவர்களிடம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறி கலைந்து செல்ல காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் சில தொழிலாளர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதில், கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் காவலர் சக்திவேல் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிகழ்வில் பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in