Published : 11 May 2020 05:55 PM
Last Updated : 11 May 2020 05:55 PM

விழுப்புரம் மாணவி எரித்துக் கொலை; குடும்பத்துக்கு உரிய இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்டது ஊரடங்கின்போது நடந்துள்ளதால் தமிழக அரசே இதற்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. கடந்த 10-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி மாணவியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், தீயில் கருகிப் படுகாயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

ஊரடங்கின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் தமிழக அரசே இதற்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் இனி இதுபோன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடக்காமல் தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x