Published : 11 May 2020 07:29 AM
Last Updated : 11 May 2020 07:29 AM

வாடகை வீட்டில் இருந்து விரட்டப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ‘உணர்வுகள்’ அமைப்பு உதவிக்கரம்

வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் தனது மகன் மற்றும் மகளுடன் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (36). இடது கண் பார்வை இல்லாதவர். இவரது கணவர் குணசேகரன். இவர்களுக்கு தமிழ்மகன் (6), மகாலட்சுமி (2) என இரு குழந்தைகள் உள்ளனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர். கலைவாணி பேனா, பென்சில் விற்று வந்தார்.

ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு தனது தாயைப் பார்க்க திருச்சி சென்ற குணசேகரனால், வெள்ளோடு திரும்ப முடியவில்லை. ஊரடங்கால் பேனா, பென்சில் விற்க செல்ல முடியாததால், கலைவாணியால் வாடகை செலுத்த முடியவில்லை. இதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதையடுத்து குழந்தை களுடன் கலைவாணி சாலையில் நடந்து வந்துள்ளார். அவரிடம் விசாரித்த தன்னார்வலர்கள், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், உணர்வுகள் அமைப்பை நடத்தி வருபவருமான மக்கள் ஜி.ராஜனிடம் தெரிவித்தனர்.

மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் ஒப்புதலுடன், கலைவாணி மற்றும் இரு குழந்தை களை, கருங்கல் பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்படும் காப்பகத்தில் தங்க வைக்க உணர்வுகள் அமைப்பினர் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x