Published : 09 May 2020 08:56 PM
Last Updated : 09 May 2020 08:56 PM

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க 98% பெண்கள் எதிர்ப்பு; பண்பாடு மக்கள் தொடர்பகம் ஆய்வில் தகவல்

ஆய்வின் முடிவுகளை வெளியிடும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பினர்.

உதகை

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க 98 சதவீத பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதித்து, ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய சூழ்நிலையில் மக்களின் மனநிலை, பொருளாதார நிலை மற்றும் அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து பண்பாடு மக்கள் தொடர்பகம் கள ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவுகளை பண்பாடு மக்கள் தொடர்பகம் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு உதகையில் இன்று (மே 9) வெளியிட்டார்.

கள ஆய்வின் முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:

"கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எங்கள் அமைப்பு கருத்துக்கணிப்பு நடத்தியது. தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் உள்ள மக்களிடம் 21 கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வில், ஊரடங்கு முன்னதாக அறிவித்திருக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். மேலும், ஊரடங்குக்கு பின்னர் அதிமுக அரசின் செயல்பாடுகள் பரவாயில்லை என்றும், வைரஸை தடுக்கத் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை, மத்திய அரசின் செயல்பாடுகள் மோசமானவை எனவும் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் நிவாரணம் போதுமானதாக இல்லை என பெரும்பாலான மக்கள் தெரிவித்தனர்.

இது போன்ற பேரிடர் காலக்கட்டத்தில் மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்து கட்சிகளின் ஆலோசனையை புறக்கணிப்பது சர்வாதிகாரமானது என 81 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், மதுக்கடைகளை திறந்தது பின்னடைவை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 98 சதவீத பெண்கள் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு சூழ்நிலையில் நடுத்தர மக்களின் வாழ்க்கை படுமோசமாக உள்ளது. ஊரடங்கு மே 17-ம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்பட்டால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என்றும், ஊரடங்குக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் எனவும் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்றார்.

மேலும், தமிழகம் முழுவதும் திமுகவுக்கு களம் சாதகமாக உள்ள நிலையில், அவர்கள் தேர்தல் களத்தில் தவறிழைத்தால், அதிமுக லாபமடையும் எனவும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x