Last Updated : 09 May, 2020 03:31 PM

 

Published : 09 May 2020 03:31 PM
Last Updated : 09 May 2020 03:31 PM

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி பொதுநல வழக்கு

மதுரை

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், போலீஸார், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு கவச உடை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் பணியில் மருத்துவத் துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களின் பணிகள் போற்றுதலுக்கு உரியது.

இவர்கள் பாதுகாப்புக்கு போதுமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை. பல இடங்களில் முகக்கவசம் கூட வழங்கப்படுவதில்லை.

பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் பணிபுரிவோர்கள், அம்மா உணவக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பாற்ற சூழலில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் கரோனா பரவல் தடுக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சமூக பரவல் மூலம் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், தூய்மை பணியாளர் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலை தடுக்க பிபிஇ எனப்படும் கவச பொருட்கள் முக்கியம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் கரோனா பரவல் தடுப்பு பணியில் உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

எனவே, மருத்துவர்கள், போலீஸார், தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட கரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கவச உடை, முகக்கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் உள்ளிட்ட பாதுகாப்ப உபகரணங்களை வழங்கவும், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x