Last Updated : 09 May, 2020 03:16 PM

 

Published : 09 May 2020 03:16 PM
Last Updated : 09 May 2020 03:16 PM

ஊரடங்கு தளர்வால் தமிழகத்தில் மின் தேவை அதிகரிப்பு: முழு உற்பத்தியில் அனல்மின் நிலையங்கள்

தூத்துக்குடி

ஊரடங்கு உத்தரவு தளர்வு காரணமாக தமிழகத்தில் மின் தேவை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் முழு அளவில் மின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டன. அனைத்து தொழில்களும் முடங்கின.

இதனால் தமிழகத்தின் மின்சார தேவை குறையத் தொடங்கியது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் தமிழகத்தின் மின் தேவை 16,151 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கால் தொழிற்சாலைகள் இயங்காததால் மின் தேவை குறைவாகவே உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் தமிழகத்தின் மின் தேவை 9,761 மெகாவாட்டாக இருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மட்டுமே இயங்கின. அதில் வெறும் 192 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்நிலையில் மே மாதம் 4-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு 3-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. பல தொழிற்சாலைகள் இயங்க நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகளை தவிர பெரும்பாலான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தின் மின்சார தேவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மே 3-ம் தேதி தமிழகத்தின் மின் தேவை 11,294 மெகாவாட்டாக இருந்தது.

இதுவே நேற்று (மே 8) 12,834 மெகாவாட்டாக உயர்ந்தது. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார உற்பத்தி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதில் தேவை குறைவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் உற்பத்தி அலகுகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.

தற்போது 5-வது அலகு மட்டும் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற 4 அலகுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த 4 அலகுகள் மூலம் இன்று சராசரியாக 834 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஊரடங்கு தளர்வு காரணமாக மேலும் பல தொழிற்சாலைகள் படிப்படியாக இயங்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் மின் தேவை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x