

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மூதாட்டி மரணமடைந்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் சிவகங்கை மாவட்டத்தில் 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஆயிசத்து பிர்தவுஸ் பீவி (77) மூச்சுதிணறலால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று இறந்தார். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கீழக்கரையைச் சேர்ந்த ஜமால்முகமது (70), கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் இறந்தார். இவரது உடலை கீழக்கரையில் புதைத்த பின்பே இவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து துக்க நிகழ்வில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.