Published : 09 May 2020 11:46 AM
Last Updated : 09 May 2020 11:46 AM

2019-20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து; நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது; ஸ்டாலின் விமர்சனம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஏற்கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதியையும் ரத்து செய்யும் சுற்றறிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு வருடங்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து விட்டு, இப்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை, கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து, மூன்று வருடத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலும் ஆகும்.

உச்ச நீதிமன்றமே அங்கீகரித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது, கரோனா பணிகளில் மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ என்ற ஐயப்பாட்டினை எழுப்புவதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனையுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே 2019-20 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி, மக்களுக்குத் துரோகம் இழைத்திடும், சுற்றறிக்கையை மட்டுமின்றி, ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x