Published : 08 May 2020 05:27 PM
Last Updated : 08 May 2020 05:27 PM

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 23 கரோனா நோயாளிகள் குணமடைந்தனர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 23 ‘கரோனா’ நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று வரை 5,409 பேர் ‘கரோனா’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகளில் மிக சிலரே, அதுவும் மற்ற நோய் பாதிப்பு இருப்வர்களே உயிரிழப்பை சந்திக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 111 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 35 பேரும் ‘கரோனா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதில், இதுவரை மதுரையை சேர்ந்த 2 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.மற்றவர்கள் சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று வரை மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 56 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருந்தனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 23 ‘கரோனா’ நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘டீன்’ சங்கு மணி கூறுகையில், ‘‘6 பெண்கள், 13 ஆண்கள், 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் உள்பட 23 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர் அடங்குவர். சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் உடல் நலம் சீராக உள்ளது. 2 பேர் மட்டும் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெறுகின்றனர், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x