Last Updated : 08 May, 2020 05:29 PM

 

Published : 08 May 2020 05:29 PM
Last Updated : 08 May 2020 05:29 PM

கொளுத்தும் வெயிலில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்; டோக்கன் வழங்குவதில் கட்டுப்பாடு

டோக்கன் வழங்கப்பட்டு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு அமர வைக்கப்பட்ட மதுப்பிரியர்கள்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் 2-வது நாளாகக் குவிந்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதலே டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

மேலும், மதுக்கடைகளையும் திறந்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தையொட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் 3 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று (மே 7) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 44 நாட்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் 155 கடைகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, கிராம மக்களின் எதிர்ப்பால் 5 கடைகள் திறக்கப்படாமல் 150 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.

நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மது விற்பனை ரூ.5 கோடியே 75 லட்சத்து 12 ஆயிரத்து 610 ரூபாயாகும்.

டாஸ்மாக் கடையைப் பார்வையிட்டு டிஐஜி சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அருகில் எஸ்.பி.ஜெயக்குமார்

இதனைத் தொடர்ந்து ஓவ்வொரு கடையிலும் நேற்று கடைக்கு வந்த நபர்களைக் கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது. உதாரணமாக தென்னமாதேவி கிராமத்தில் நேற்று 2 ஆயிரம் மதுப்பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தாமதமாக வந்தவர்களை வேறு கடைகளுக்குச் செல்லுமாறு காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 8) தென்னமாதேவி டாஸ்மாக் கடையை டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மதுக்கடைகளில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x