Published : 08 May 2020 04:12 PM
Last Updated : 08 May 2020 04:12 PM

கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மையங்களில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவிட் மையங்களில் திடீர் ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கரோனா பாதித்த நபர்களுக்குத் தேவையான அளவு தரமான உணவு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வித அறிகுறியும் இன்றி வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, தற்போது எந்தவொரு மருத்துவ உபகரணத்தின் உதவியின்றி இயல்பாக உள்ள நோயாளிகள் சென்னையில் உள்ள பல்வேறு கோவிட் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் லயோலா மற்றும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை, மருத்துவர் பார்ப்பதில்லை, மருந்து தருவதில்லை, சுகாதாரமான குடிநீர் இல்லை எனக் காணொலி வெளியிட்டமர். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுறித்து சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் இன்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித அறிகுறியும் இன்றி வைரஸ் நோய்த்தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, தற்பொழுது எந்தவொரு மருத்துவ உபகரணங்களின் உதவியின்றி இயல்பாக உள்ள நோயாளிகள் சென்னையில் உள்ள பல்வேறு கோவிட் மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இதுநாள்வரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 159 நபர்கள் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள மையத்திலும் மற்றும் 164 நபர்கள் வைஷ்ணவா கல்லூரியில் அமைந்துள்ள மையத்திலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 306 நபர்கள் சென்னை வர்த்தக மையத்திலும், ஓமந்தூரார் அரசு உயர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 108 நபர்கள் லயோலா கல்லூரி மையத்திலும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 16 நபர்கள் தேசிய திறன்வளர்ச்சி மையத்திலும் என மொத்தம் 753 நபர்கள் தங்க வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அனைத்து மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாள்தோறும் சத்தான, தரமான உணவு பொது சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி வழங்கப்பட்டு அவர்களின் உடல்நிலை மருத்துவ அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில் முதல்வர் உத்தரவின்படி, சிறப்பு அலுவலர்கள், பல்வேறு மண்டல அளவிலான சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எந்தவொரு அறிகுறியும் இன்றி கரோனா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மையம், அடையாறு மண்டலம், கிண்டி இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் அமைந்துள்ள மையம், சோழிங்கநல்லூர் மண்டலம், செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மையம் மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் உள்ள கோவிட்-19 மையங்களையும் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், இன்று (08.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, கோவிட் மையங்களில் சிகிச்சை பெற்று நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதித்த நபர்களுக்கான பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ள உணவுப் பட்டியலின்படி, இம்மையங்களில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நபர்களின் கோரிக்கையின்படி கூடுதலாக உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x