Published : 08 May 2020 12:31 PM
Last Updated : 08 May 2020 12:31 PM

அவசர அனுமதிச் சீட்டுகளை 24 மணிநேரமும் வழங்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அவசர அனுமதிச் சீட்டுகளை 24 மணிநேரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு அவசர அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகின்றன. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதிச் சீட்டு தாமதமாக வழங்கப்படுகிறது.

இறுதிச் சடங்கில் பங்கேற்க வெளியூருக்குப் பயணிப்பவர்களுக்குத் தாமதமாக அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "திருமணம் உள்ளிட்ட விழாக்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படுவதால், முன்கூட்டியே விண்ணப்பிக்க முடியும். ஆனால், திடீரென எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணத்தால் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகவும், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவம் பார்க்கவும் அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்கும்போது தாமதமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

மின்னணு அனுமதிச் சீட்டுகள் வழங்கும் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசரகால பயணங்களுக்கு அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதனால், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணிநேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்.

மருத்துவம் மற்றும் மரணம் தொடர்பான இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு 24 மணிநேரமும் அனுமதிச் சீட்டுகள் வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை இன்று (மே 8) விசாரித்த நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, "24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பதற்கு என்ன அர்த்தம்?" என்று கேள்வி எழுப்பினர். வரும் திங்கட்கிழமை உரிய பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x