Published : 07 May 2020 04:49 PM
Last Updated : 07 May 2020 04:49 PM

ரூ.5000 கரோனா நிவாரண நிதி கோரி திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்: கோவில்பட்டியிலும் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ரூ.5000 கரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் பகுதியில் வசித்து வரும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் சுமார் 50 பேர் இன்று காலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஊரடங்கால் வேலை இல்லாமல், உணவுக்குகூட வழியின்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு அரசு தலா ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், இவ்வாறு கூடுவது சட்டவிரோதம்.

எனவே, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார்தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் மனு ஒன்றை எழுதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

குடியேறும் போராட்டம்

ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் விஏஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வலிப்பு, முடக்கு வாதம் நோய்களுக்கான மருந்துகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி இன்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி அருகே வில்லிச்சேரி விஏஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுததிறனாளிகள் சங்க நகர செயலாளர் சக்கரையப்பன், இனாம்மணியாச்சி ஊராட்சி அலுவலகம் முன்பு சங்க பாதுகாப்பாளர் அழகுசுப்பு, கிழவிபட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் முத்துமாலை, வில்லிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கழுகுமலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்ட துணை செயலாளர் சாலமன், கரடிகுளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. மதியம் ஒரு மணி வரை நடந்த போராட்டத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

-ரெ.ஜாய்சன், எஸ்.கோமதி விநாயகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x