Last Updated : 07 May, 2020 11:12 AM

 

Published : 07 May 2020 11:12 AM
Last Updated : 07 May 2020 11:12 AM

மூன்று மாதங்களாக சரிசெய்யப்படாத மின்மாற்றிகள்: சிவகங்கை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் கருகும் பயிர்கள்- வேதனையில் விவசாயிகள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல நூறு ஏக்கரில் பயிர்கள் கருகி வருகின்றன.

சிவகங்கையில் திருப்பத்தூர் ரோட்டில் 110 கே.வி. துணை மின்நிலையம் உள்ளது. இந்நிலையில் ஜன.14-ம் தேதி நள்ளிரவு மொத்தமுள்ள மூன்று 10 கே.வி.ஏ. மின்மாற்றிகளில் 2 எரிந்தன.

மூன்று மாதங்களாக ஒரு மின்மாற்றி மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் முழுமையாக மின்விநியோகம் செய்ய முடியவில்லை. இதையடுத்து சிவகங்கை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மதகுபட்டி, காளையார்கோவில், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சிவகங்கை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதகுபட்டி, காளையார்கோவில், மானாமதுரை, பூவந்தி, இடையமேலூர் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

மேலும் விவசாயப் பகுதிகளுக்கு குறைந்தழுத்த மின்சாரமே செல்கிறது. மூன்று மாதங்களாக பம்புசெட் மோட்டார்களை இயக்க முடியாதநிலை உள்ளது. இதனால் பல நூறு ஏக்கரில் பயிர்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து நாட்டரசன்கோட்டை ஓய்வு பெற்ற விஞ்ஞானியும், விவசாயியுமான ரெங்கராஜன் கூறியதாவது: ஏற்கெனவே நாட்டரசன்கோட்டை பகுதியில் மின் விநியோகம் சீராக இருப்பதில்லை. தற்போது எங்கள் பகுதி மின்சாரத்தையும் சிவகங்கை பகுதிக்கு அனுப்புவதால் குறைந்தழுத்த மின்சாரமே கிடைக்கிறது.

450 வேல்ட் மின்னழுத்தம் கிடைத்தால் தான் மோட்டார்களை இயக்க முடிகிறது. ஆனால் 260 வேல்ட் தான் வருகிறது. இதனால் மூன்று மாதங்களாக மோட்டர்களை இயக்க முடியவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் சிவகங்கையில் ஏசி வைத்திருப்பவர்களுக்கு எங்களால் சரியான மின்னழுத்தம் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் விவசாயத்திற்கு சரியான மின்னழுத்தம் அனுப்புவது சிரமம் தான் என்று கூறிவிட்டனர், எனது 5 ஏக்கரில் கடலை, கத்திரி, வெண்டை போன்றவை கருகி வருகின்றன, என்று கூறினார்.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிவகங்கை துணை மின்நிலைய மின்மாற்றிகளை சரிசெய்தால், மற்ற துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் கொடுக்க வேண்டியுள்ளது.

பல முறை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வலியுறுத்தியும் டிரான்ஸ்பார்ம்கள் வராததால் மற்ற பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x