தமிழக - கேரள எல்லையில் வாகனஓட்டிகளுக்கு சோதனைச்சாவடி அமைக்க முயற்சி: காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 17 பேர் கைது

தமிழக - கேரள எல்லையில் வாகனஓட்டிகளுக்கு சோதனைச்சாவடி அமைக்க முயற்சி: காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 17 பேர் கைது

Published on

தமிழக - கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனைசாடி அருகே வாகன ஓட்டிகளுக்கு உதவி மையம் அமைக்க காங்கிரஸார் முயற்சி. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அனுமதி அளிக்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். தடையை மீறி உதவி மையம் திறக்க முயன்ற இரண்டு எம்எல்ஏக்கள் உட்பட 17 காங்கிரஸார் கைது.

உலகம் முழுவதும் கரோனா அச்சம் காரணமாக இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக வருகிற 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் பணிபுரியும் கேரள மாநில மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு அரசு வழங்கும் இ.பாஸை பயன்படுத்தி செல்ல தொடங்கியுள்ளனர்.

இவர்களை தடுத்து நிறுத்தி வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இதை தவிர்க்கும் விதமாக குமரி-கேரள எல்லை சோதனை சாவடி அருகே உதவி மையம் ஒன்றை திறக்க காங்கிரசார் முடிவு செய்தனர்.

அதன்படி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் உதவி மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர் 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் உதவி மையம் அமைக்க அனுமதி மறுத்தனர்.

ஆனால் போலீசாரின் அனுமதியை மீறி காங்கிரசார் குமரி-கேரள எல்லைப்பகுதியில் உதவி மையம் அமைக்க முயன்றனர். இதனைத்தொடர்ந்து அனுமதியின்றி உதவி மையம் திறந்ததாக கூறி 2 எம்எல்ஏக்கள் உள்பட 17 காங்கிரசாரை தக்கலை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான போலிசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in