Published : 06 May 2020 12:41 PM
Last Updated : 06 May 2020 12:41 PM

சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கு: தமிழக அரசு 14-ஆம் தேதி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கரோனா பாதித்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சட்டவிரோதமாக போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு வருகிற 14-ஆம் தேதி பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கரோனா பாதித்த வீடுகளை அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை தடுப்பு ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பகுதிகளில் தெருக்களிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்,

ஒரு சில பகுதிகளில் கரோனா தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் பகுதிகளிலும் தடுப்புகளை அகற்றாமல் காவல்துறை தொடர்ந்து வைத்துள்ளதாகவும் இதனால் அந்த பகுதி மக்கள் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே தேவையில்லாத சட்டவிரோதமான தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வினித் கோத்தாரி , நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ,பாதித்த பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும் அதற்கான பட்டியலையும் தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது என்றும் அதே வேளையில் சட்டவிரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x