

முதல்வர் கே.பழனிசாமி மனமுவந்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடிவெடுக்கவில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை கரிசல்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மே 17க்குப் பிறகு ஊரடங்கு நீடிக்கக்கூடாது என அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்று எல்லாரும் ஆண்டவனை வேண்டிக் கொள்ளுங்கள். கரோனா தோற்று பாதிப்பு மதுரையில் குறைந்துள்ளது. கடந்த 2 நாளாக ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை.
கரோனா நிவாரண நிதி இந்த மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலிப்பார். நிதி நிலைக்கு ஏற்ப கரோனா நிதி வழங்க முடிவு செய்யப்படும்.
பஞ்சமில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் நமது முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நம்மைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்த காரணத்தால் நாமும் திறக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கள்ளச்சாராயம் வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.
முதல்வர் மனமுவந்து மதுக்கடை திறக்கும் முடிவை எடுக்கவில்லை. குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்ற அடிப்படையில்தான் மதுக்கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி 5 நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.