

மாரடைப்பால் இறந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய மதுரைக்கு வந்த இடத்தில் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லாமல் தவித்த பெண்ணுக்குக் கோவை செல்வதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உதவினார்.
கோவை வாகராயபாளையத்தைச் சேர்ந்தவர் அஞ்சலிதேவி. இவர் கணவர் முனீஸ்வரன், வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஏப்ரல் 1-ம் தேதி முனீஸ்வரன் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான சோழவந்தான் காடுபட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.
முனீஸ்வரன் பெற்றோர் ஏற்கெனவே இறந்து விட்டனர். இதனால் கணவரின் தங்கை வீட்டில் ஒரு மாதமாக குழந்தையுடன் அஞ்சலி தேவி தங்கியிருந்தார். வைத்திருந்த பணம் காலியானதால், குழந்தைக்குப் பால் வாங்க கூட பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
பணம் இல்லாமல் குழந்தையுடன் தவிப்பதையும், கோவைக்கு மீண்டும் செல்ல வழியில்லாமலும் அஞ்சலிதேவி தவிக்கும் தகவல் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்க்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று (மே 5) ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரை சந்தித்து தனது பரிதாப நிலையை தெரிவித்தார்.
இதையடுத்து அஞ்சலிதேவி கோவைக்கு செல்ல அவசர பாஸ் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார். அவருக்கு 3 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை செஞ்சிலுவை சங்கச் செயலர் கோபாலகிருஷ்ணன், அவைத் தலைவர் ஜோஸ், வழக்கறிஞர் முத்துக்குமார், மைதிலி, விமல், காதர் ஆகியோர் வழங்கினர்.