Published : 05 May 2020 12:17 PM
Last Updated : 05 May 2020 12:17 PM

இருமாதங்களாகப் பிரித்து மின் பயனீட்டுக் கட்டணம் கணக்கிடப்படுமா?- மின் நுகர்வோர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 4 மாதங்களுக்குரிய மின் பயனீட்டு அளவை இரண்டு இருமாத கணக்கீடாகப் பிரித்துக் கட்டணத்தைக் கணக்கிட வேண்டுமென மின்நுகர்வோர் அரசை எதிர்நோக்குகின்றனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலமாக தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 39 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மேலும் 17 நாட்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் வீடுகளில் 60 நாட்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டு அளவைக் கணக்கிடும் பணியும் மார்ச் 23-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான மின் பயனீட்டு அளவை மார்ச் மாதத்தில் கணக்கீடு செய்யப்படாததால் ஜனவரி மாத மின் கட்டணத்தையே மின் நுகர்வோர் செலுத்தலாம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், மின் பயனீட்டுக் கணக்கீடும் செய்யப்படாமலேயே உள்ளன. குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் வீடுகளில் குறைந்த அளவிலேயே மின்சாரப் பயன்பாடு இருந்திருக்கும். தொடர்ந்து மார்ச், ஏப்ரல் தற்போது மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், அனைவரும் வீடுகளிலேயே முடங்கியிருப்பதாலும் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமோ என மின் நுகர்வோர் சந்தேகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எம். சேகரன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''ஊரடங்குக்கு முன்னதாக வீடுகளில் மின்சாரப் பயன்பாடு குறைவாக இருந்திருக்கும். ஊரடங்கு காலத்தில் அனைத்து வீடுகளிலுமே பயன்பாடு அதிகமாகவே உள்ளது. தொழிலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு ஒரே அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசம், 100 முதல் 200, 200 முதல் 500, 500-க்கு மேல் என பயன்படுத்தப்படும் யூனிட்டுகளுக்கு தக்கவாறு ஸ்லாப் முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஊரடங்கு முடிந்து மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்யும் போது, மின்சாரக் கட்டணம் அதிக அளவில் கட்ட வேண்டியிருக்குமோ என நுகர்வோர் அச்சத்தில் உள்ளனர். எனவே, மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் 4 மாத மின் கட்டணத்தை இரண்டு இருமாத கணக்கீடாகப் பிரித்துக் கட்டணத்தை வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, மார்ச் மாதம் 23-ம் தேதியிலிருந்து மின் கட்டணக் கணக்கீட்டுப் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு செலுத்திய கட்டணத்தையே அடுத்த மாதங்களுக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும், வெயில் காலம் என்பதாலும், வீடுகளில் மின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. 4 மாதங்களுக்கான மின் பயன்பாட்டை இரு இரண்டு மாதங்களாகப் பிரித்துக் கணக்கிடுவது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இது தொடர்பாக அரசு உரிய அறிவிப்பை வெளியிட்டால், மின் கட்டண சாப்ட்வேரில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன்படி வசூலிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x