சொந்த ஊர்களுக்கு செல்ல 1.75 லட்சம் வெளிமாநிலத்தவர் பதிவு: மாநிலவாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

சொந்த ஊர்களுக்கு செல்ல 1.75 லட்சம் வெளிமாநிலத்தவர் பதிவு: மாநிலவாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சொந்த ஊர்களுக்கு செல்ல 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவெளிமாநிலத்தவர் பதிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகம் சார்பில் மாநில வாரியாக ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே தங்கியுள்ள நிலையில், அவர்களை, அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மாநிலம்தோறும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து, வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள் திரும்பிவர பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட, ‘‘nonresidenttamil.org’ என்ற இணையதளத்தில், தமிழகத்தில் இருந்து தங்கள் ஊர்களுக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத்தவர், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வர விரும்பும் தமிழர்கள் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, மத்திய அரசின் அறிவிப்பை அறிந்த சென்னை, செங்கல்பட்டு, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உதவியுடன் அவர்களை சமாதானப்படுத்தி, அதே இடங்களில் தங்கவைத்ததுடன், அவர்கள் விவரங்களை சேகரித்து, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இங்கிருப்பவர்களை அனுப்பவும், அங்கிருப்பவர்களை அழைத்து வரவும் மாநிலவாரியாக ஒருங்கிணைப்புக்கு, தமிழக அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவுக்கு ஐஏஎஸ் அதிகாரி காக்கர்லா உஷா, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு எஸ்.ஜே.சிரு மற்றும் சுதன், பிஹார் மாநிலத்துக்கு குமார் ஜெயந்த் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி நஜ்மல் ஹோடா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு கே.சீனிவாசன் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரி நிகார் ரஞ்சன், ஒடிசா மாநிலத்துக்கு சி.சமயமூர்த்தி, மேற்கு வங்கத்துக்கு டி.பி.ராஜேஷ், ஹரியாணாவுக்கு அனில் மேஷ்ராம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு எம்.சுதாதேவி, கர்நாடகா, சிக்கிம் மாநிலங்களுக்கு பி.சந்திரமோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவுக்கு ஜானி டாம் வர்கீஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிடி.ரிட்டோ சிரியாக், மத்தியபிரதேசத்துக்கு ராஜேஷ் லக்கானி, மகாராஷ்டிராவுக்கு பூஜா குல்கர்ணி, டெல்லிக்கு மங்கத்ராம் சர்மா, பஞ்சாப்க்கு ககன்தீப்சிங் பேடி, ராஜஸ்தானுக்கு ஐஎப்எஸ் அதிகாரி ஆர்.கே.ஜகேனியா, தெலங்கானாவுக்கு என்.வெங்கடேஷ், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு பின்கி ஜோவல், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பிரதீப்யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகங்களுடன் பேசி இங்கிருந்தும், அந்தந்த மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in