Published : 04 May 2020 07:57 PM
Last Updated : 04 May 2020 07:57 PM

தமிழகத்தில் இன்று 527 பேருக்கு கரோனா; சென்னையில் 266 பேருக்கு தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆனது

தமிழகத்தில் 527 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 266 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 527 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் அதாவது 266 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 1,458 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழக அமைச்சரவை கூடி தமிழகத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில் சென்னைக்கு மட்டும் தனியாக அறிவிப்பை வெளியிட்டது.

ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ள அரசு இன்று ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. இதனால் இன்று போக்குவரத்து வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கரோனா அதிகரித்துள்ளது. நேற்றைய தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை இன்றைய சென்னையின் மொத்த எண்ணிக்கையாக உள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளது. இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 527 ஆகும். அதைச் சேர்த்து 3,550 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 266 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 18 மாவட்டங்களில் 63 பேருக்கு தொற்று உள்ளது. 25 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை.

* தற்போது 36 அரசு ஆய்வகங்கள், 14 தனியார் ஆய்வகங்கள் என 50 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 2,107 பேர்.

* அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 40 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,62,970.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,53,489.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 12,863.

* மொத்தம் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 3,270.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 527.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 377 பேர். பெண்கள் 150 பேர்.

* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,270.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 30 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,409 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 266 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 1,458 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொற்று எண்ணிக்கை அதே எண்ணிக்கையில் 146 ஆக உள்ளது. திருப்பூரில் தொற்று எண்ணிக்கை 114 ஆக உள்ளது. திண்டுக்கல்லில் 10 அதிகரித்து 91 ஆக அதிகரித்துள்ளது., ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. புதிதாக சென்னையில் 266, சென்னைக்கு அடுத்ததாக கடலூரில் அதிகபட்சமாக 122 அதிகரித்து 161 ஆக உள்ளது. திருவள்ளூரில் 9 அதிகரித்து 79 ஆக உள்ளது.

அரியலூர் தொற்று எண்ணிக்கை 6 அதிகரித்து 34 ஆக உள்ளது. விழுப்புரத்தில் 49 அதிகரித்து 135 ஆக உள்ளது, திருவண்ணாமலையில் 11 அதிகரித்து 27 ஆக உள்ளது. மதுரையில் 1 அதிகரித்து 92 ஆக உள்ளது. செங்கல்பட்டில் 4 அதிகரித்து 97 ஆக உள்ளது. தென்காசியில் 9 அதிகரித்து 49 ஆக உள்ளது. கரூரில் 1 அதிகரித்து 11 ஆக உள்ளது.

பெரம்பலூரில் தொற்று எண்ணிக்கை 25 அதிகரித்து 36 ஆக உள்ளது. திருப்பத்தூரில் 1 அதிகரித்து 19 ஆக உள்ளது. திருவாரூரில் தொற்று எண்ணிக்கை 2 அதிகரித்து 21 ஆக உள்ளது. திருச்சியில் 4 அதிகரித்து 55 ஆக உள்ளது. விருதுநகரில் 2 அதிகரித்து 34 ஆக உள்ளது. மொத்தம் 19 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 190 பேர். இதில் ஆண் குழந்தைகள் 95 பேர். பெண் குழந்தைகள் 95 பேர்.

13 முதல் 60 வயது உள்ளவர்கள் 3,047 பேர். இதில் ஆண்கள் 2,089 பேர். பெண்கள் 957பேர். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 313 பேர். இதில் ஆண்கள் 208 பேர். பெண்கள் 105 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 3.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x