Published : 02 May 2020 11:52 AM
Last Updated : 02 May 2020 11:52 AM

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது: ஊரடங்கு தளர்வு, நிவாரணத் தொகை அம்சங்கள் குறித்து ஆலோசனை

ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கில் மூன்று மண்டலங்களில் தளர்வுகள் குறித்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்கவும், தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆராய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில் இன்று (மே 2) அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால், நேற்றிரவே மத்திய அரசு ஊரடங்கை மே 17 வரை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும் நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் செய்யவேண்டியது குறித்தும், தளர்வு குறித்தும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இது தவிர நச்சுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசுத்துறை சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதை அடுத்து, முக்கிய நகரங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அதைக் கண்டுகொள்ளாமல் வெளியில் நடமாடுவதைத் தடுக்கவே 3 மாநகராட்சிகள் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த முழு ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்தும் தமிழகத்தில் அதன் தன்மைக்கேற்ப அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் பச்சை மண்டலங்களில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் மதுக்கடைகளே திறக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே மதுக்கடைகள் திறப்பு குறித்து எடுக்கப்படும் முடிவு இன்று ஆலோசனையில் இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோன்று சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதும், அது குடிசைப்பகுதிகளிலும் பரவுவதும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னையின் நிலையைக் கருத்தில்கொண்டு பேரிடர் மேலாண் ஆணையர் ராதாகிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ள நிலையில், சென்னையில் ஊரடங்கை அமல்படுத்துவதில் மேலும் கட்டுப்பாடு குறித்து இன்று ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x