

சென்னையில் இருந்து காலாவதியான அனுமதி சீட்டுடன் எட்டயபுரத்தில் நடைபெறும் திருமணத்துக்கு வந்த 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சோதனைச்சாவடி வழியாக ஒரு கார் மற்றும் வேன் வந்தது. இதில் 20 பேர் இருந்தனர். போலீஸார் அவர்களிடமிருந்த அனுமதி சீட்டை வாங்கி பார்த்தனர்.
இதில் அவர்கள் சென்னையில் இருந்து 23-ம் தேதி வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வர முடியவில்லை. நாங்கள் எட்டயபுரம் நடுவிற்பட்டியில் மே 4-ம் தேதி நடைபெறும் திருமணத்தில் பங்கேற்க வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதே போல், 2 கார்களில் 8 பேர் எட்டயபுரம் கான்சாபுரத்துக்கு உடல்நிலை சரியில்லாத உறவினரை பார்க்க வந்தனர். மேலும், ஒரு காரில் 7 பேர் எட்டயபுரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தனர்.
அவர்கள் உரிய அனுமதி சீட்டு வைத்திருந்தனர். இதையடுத்து காலாவதியான அனுமதி சீட்டுடன் வந்தவர்களின் ஒரு கார், வேன் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் அனைவருக்கும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சளி, ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், 35 பேரையும் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.