கரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணம்: சிவகங்கையில் சோகம்

கரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணம்: சிவகங்கையில் சோகம்
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் விபத்தில் மரணமடைந்தார்.

பெரம்பலூரைச் சேர்ந்த டெய்லர் தமிழ்மணி. இவர் தனது சொற்ப வருமானத்தில் தனது மகள் அகிலாவை (23) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார்.

எம்பிபிஎஸ் இறுதியாண்டு முடித்து அகிலா ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்தார்.

மார்ச் 28-ம் தேதியுடன் பயிற்சி மருத்துவர் பணி முடிந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க, அவரை மேலும் ஒரு மாதம் பணிபுரிய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பயிற்சி முடித்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரும், அவரது நண்பர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபஞ்சனும் (23) மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

சான்றை பெற்றுக் கொண்டு குயவன்விலக்கு அருகே வந்தபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஏனாதியைச் சேர்ந்த கருப்பணன் மோதினார். காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி அகிலா இறந்தார்.

டெய்லரின் மகளாக பிறந்து, தந்தையின் கனவை நனவாக்கும் முன்பே அகிலா இறந்தது மருத்துவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in