

ஊதியம் வழங்காத மின்வாரியத்திற்கு மின்வாரிய தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மின் பகிர்மான வட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் வங்கிக்கணக்கில் மாதத்தின் இறுதி நாளன்று ஊதியம் வரவு வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று (ஏப்.30) மின்வாரியம் கணக்கு வைத்துள்ள 3 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2 வங்கிகள் மின்வாரிய ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்தை வரவு வைத்தது. ஒரு வங்கியில் 123 மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.
இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, "ஊரடங்கால் வங்கிகள் பிற்பகல் 1 மணி வரை இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. மின்வாரியத்தில் பணியாற்றும் நிர்வாக ஊழியர்கள் வங்கிக் கொடுக்க வேண்டிய ஊதிய பட்டியலை தாமதமாக வழங்கியதால் தொழிலாளர் தினத்திற்கு முன்தைய நாள் ஊதியத்தை வங்கியால் வரவு வைக்க இயலவில்லை. இதற்கு முழு காரணம் மின்வாரியத்தின் அலட்சியமே" என்றனர்.
இந்நிலையில், இன்று (மே 1) சிஐடியூ மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தினர் மே தின கொடியேற்றி, கொடி கம்ப கல்வெட்டில், "மின்வாரியத்தின் பாரபட்சமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்" என எழுதியுள்ளனர்.