Last Updated : 30 Apr, 2020 08:37 PM

 

Published : 30 Apr 2020 08:37 PM
Last Updated : 30 Apr 2020 08:37 PM

மதுரையில் சீல் வைத்த பகுதியில் முதியவர் மரணம்: உறவினர்கள் வர மறுத்த நிலையில் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்கள்

மதுரையில் கரோனா பீதியால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் வர மறுத்த நிலையில் தன்னார்வலர்கள் முன்னின்று அடக்கம் செய்தனர்.

கரோனா பாதிப்பு காரணமாக மதுரையில் செல்லூர் பகுதியில் சில தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவரின் உடலை வீட்டிற்கு எடுத்து வர வேண்டும் என அவர் மனைவி விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வாட்டாச்சியர் பாண்டி கீர்த்தி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் செஞ்சிலுவை சங்கச் செயலர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார், விமல், தினேஷ்குமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் உடலை சீல் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றி இறந்தவரின் முகத்தை பார்க்க அவரது உறவினர்களுக்கு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் கரோனா பீதியால் யாரும் வீ்ட்டை விட்டு வெளியே வரவில்லை. இறந்தவரின் மனைவி மட்டுமே வந்தார்.

உறவினர்கள் யாரும் வராத நிலையில் தன்னார்வலர்களே இறந்தவரின் உடலை தத்தனேரி மயானத்துக்கு கொண்டுச் சென்று அடக்கம் செய்தனர். அவரது மனைவியை மயானத்துக்கு அழைத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்ய ஏற்பாடு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x