Published : 30 Apr 2020 08:31 PM
Last Updated : 30 Apr 2020 08:31 PM

முகக்கவசம், கையுறைகள் வழங்குக: பாதுகாப்பு உபகரணங்களின்றி பணியாற்றும் கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் ஊரடங்கின்போது பணியாற்றும் கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் அச்சத்தில் உள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பணிகள் அடிப்படையில் மருத்துவம், பொதுசுகாதாரம், காவல்துறையினரோடு, கால்நடை பராமரிப்புத்துறைக்குட்பட்ட கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனை, பன்முக மருத்துவமனைகள், கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், கையுறைகள், சானிடைசர் போன்றவை வழங்கப்படாததால் நோய்த்தொற்று அபாயத்தில் உள்ளனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது: ஊரடங்கின்போது மற்ற துறையினரைப்போல் நாங்களும் பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் முகக்கவசம் மட்டும் குறைந்தளவில் வழங்கினர். மேலும், கையுறைகள், சானிடைசர் வழங்கவில்லை.

இதனால் நோய்த்தொற்று அபாயம் உள்ளது. எனவே, உயிர் காக்கும் உபகரணங்களை விரைந்து வழங்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x