Published : 30 Apr 2020 08:16 PM
Last Updated : 30 Apr 2020 08:16 PM

உணவுக்கே கஷ்டப்பட்ட பெண்ணுக்கு உடனடி நிவாரணம்: வாட்ஸ் அப் தகவலைக் கவனமெடுத்த கனிமொழி எம்.பி.  

சென்னையில், கணவரை இழந்த பெண் ஒருவர் பொதுமுடக்கத்தால் உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுவதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. இத்தகவலைக் கவனமாகக் கையாண்டு அவருக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்து கொடுத்திருக்கிறார் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி.

கரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ என்ற தளத்தில் திமுகவினரையும் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இவரின் வழிகாட்டல்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் பரவலாகக் கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் சீர்காழியைச் சேர்ந்த திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான கிள்ளை ரவிந்திரன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்துவருகிறார். இன்றும் சீர்காழி தாலுகா அகணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பார்வை மாற்றுத் திறனாளிகள், வாய் பேச முடியாதவர்கள் உள்ளிட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார் கிள்ளை ரவிந்திரன்.

அப்போது, வாட்ஸ் அப் வழியே அவருக்கு வந்த தகவலில், '' சென்னை மூலக்கடையில் வசிக்கும் சீர்காழியைச் சேர்ந்த குமுதா என்பவர் பொதுமுடக்கத்தால் உணவுக்குக்கூட வழியின்றி தவித்து வருகிறார். கணவர் பகீரதன் இறந்துவிட்ட நிலையில், மற்றவர்களிடம் உதவி கேட்கவும் தயங்கி நிற்கிறார். திமுக அனுதாபியான இவரது கணவர் பகீரதன், திமுக மூத்த தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரைப் புகழ்ந்து பாடல் பாடி அதற்காக ஸ்டாலினிடம் 2 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றவர்'' என்று இருந்தது.

அப்போதே இந்த வாட்ஸ் அப் தகவலை திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் ரவிந்திரன். உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய கனிமொழி, குமுதாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கும்படி மகளிர் தொண்டரணியின் மாவட்ட அமைப்பாளர் கோமளவள்ளிக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அடுத்த சில மணி நேரத்தில் குமுதாவின் வீட்டுக்குச் சென்ற கோமளவள்ளி, அவருக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கித் தந்து அந்தத் தகவலை கனிமொழிக்கும் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x