Published : 29 Apr 2020 09:51 AM
Last Updated : 29 Apr 2020 09:51 AM

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்; விஜயகாந்த்

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, விஜயகாந்த் இன்று (ஏப்.29) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில், "தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8-க்கும் அதிகமான மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கெரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் அந்தமானில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்குவதற்கு இடவசதி, உண்ண உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தங்களை மீட்டுத் தாயகம் அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டனர். எனவே, தமிழக அரசு, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை தனி விமானித்திலோ அல்லது அவர்கள் படகிலேயே தமிழகம் வருவதற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதேபோல் அண்டை நாடுகள் மற்றும் மும்பையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டி அவர்களை காத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x