

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 பேரும் குணமடைந்துள்ளனர். இதனால், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்குத்தான் ஈரோடு மாவட்டத்தில் முதன்முதலில் கரோனா தொற்று உறுதியானது. மார்ச் 29-ம் தேதி கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி 20 ஆகவும், ஏப்ரல் 5-ம் தேதி 28 ஆகவும், ஏப்ரல் 8-ம் தேதி 32 ஆகவும் உயர்ந்தது.
70 பேர் பாதிப்பு
ஏப்ரல் 9-ம் தேதி ஒரே நாளில் 26 பேருக்கு நோய் தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 15-ம் தேதி 70 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் கடந்த 14 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை.
மறுபுறம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இருகட்ட சோதனைக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 65 பேர் குணமடைந்த நிலையில், எஞ்சியிருந்த 4 பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். காரோனா பாதிப்படைந்த பெருந்துறையைச் சேர்ந்த முதியவர் மட்டும் உயிரிழந்து ள்ளார்.
ஊரடங்கில் தீவிரம்
டெல்லி சென்று திரும்பியவர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் கண்டறிவதில் காவல்துறையும், மாவட்டநிர்வாகமும் இணைந்து தீவிரமாக செயல்பட்டன.
மருத்துவக்குழுக்கள் மூலம் பரிசோதனை மேற்கொண்டது, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியேறாதவாறு காவல்துறை பாதுகாப்பு என்ற இணைந்த செயல்பாட்டால் கரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டது. மேலும், அரசின் அனைத்துத் துறையினரும் ஊரடங்கை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டினர்.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் கூறும்போது, ”ஈரோட்டில் கரோனா பாதிப்புக் குள்ளான 70 பேரில், 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். முதியவர் மட்டும் இறந்துள்ளார். 14 நாட்களில் புதிய தொற்று எவருக்கும் ஏற்படவில்லை. இதன் மூலம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியுள்ளது” என்றார்.
எஸ்பி சக்திகணேசன் கூறும்போது, ”தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், 28 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அங்கு, 28 நாட்கள் நிறைவடைந்த பின்னர், புதிய தொற்று இல்லை என்ற நிலையில், அங்கு தளர்வு ஏற்படுத்தப்படும்” என்றார்.