Last Updated : 28 Apr, 2020 06:28 PM

 

Published : 28 Apr 2020 06:28 PM
Last Updated : 28 Apr 2020 06:28 PM

குமரி மலை கிராமங்களில் உணவின்றி தவித்த பழங்குடியின மக்கள்: வீடுகளுக்கே சென்று உணவு பொருட்கள் வழங்கிய வனத்துறையினர்

நாகர்கோவில்

குமரி மலை கிராமங்களில் உணவின்றி தவித்த பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று வனத்துறையினர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்களை மட்டும் வாங்கி வந்து கரோனா தொற்று ஏற்படாத வகையில் நாட்களை கடத்தி வருகின்றனர்.

அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள், மற்றும் நிவாரணங்களை அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்திய பின்பும், வருவாய் இல்லாமல் சிரமமடையும் கிராமப்புற மக்களுக்கு தன்னார்வலர்கள், மற்றும் அரசியல் கட்சியினர், பொதுநல விரும்பிகள் உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் உணவு பொருட்களை வாங்க நகர்புறங்களுக்கு வரமுடியாமலும், வருவாய் இன்றியும் தவித்து வருகின்றனர்.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, அழகியபாண்டியபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் அன்றாட உணவு பொருட்களை பெறமுடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். கைவசம் உள்ள உணவு பொருட்களை சமைத்து சாப்பிட்டு வருவதாகவும், நகர், மற்றும் கிராமப்புறங்களில் உதவி செய்வோர் மலைகிராம மக்களையும் பார்வையிட்டு ஊரடங்கு வரை அத்தியாவசிய தேவைகளை செய்து தரவேண்டும் என பழங்குடியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து அழகியபாண்டிபுரம் வன பகுதிக்குட்பட்ட பழங்குடியினர் வசிக்கும் கூரைக்காடு, படுபாறை மலைகிராமத்திற்கு வனத்துறையினர் நேரடியாக வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகியபாண்டிபுரம் உதவி வன பாதுகாவலர் ஹேமலதா தலைமையில் வனத்துறையினர் 150 காணி, மற்றும் பழங்குடியின குடும்பத்தினருக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

அரிசி, பருப்பு, காய்கறி, மற்றும் உணவு பொருட்களுடன் கரோனா தொற்றை தடுப்பதற்கான முககவசங்கள், கைகளை சுத்தப்படுத்தும் திரவத்தையும் வழங்கினர்.

இதுகுறித்து உதவி வன பாதுகாவலர் ஹேமலதா கூறுகையில்; ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வனத்துறையினர் உதவும் வகையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்தோம். இதைப்போல் பிற மலை கிராமங்களிலும் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விரைவில் வழங்கவுள்ளோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x