

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மையம் இல்லாத நிலையில் பரிசோதனைகளை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,518 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 15 நபர்களுக்கு கரோனா தொற்று தொற்று உறுதியானது.
தொற்று செய்யப்பட்டவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு இவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்தோர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை மையம் இல்லாததால் சளி மாதிரிகள், மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட அளவுக்கே பரிசோதனை செய்ய முடியும் என்பதால், முடிவுகள் தெரிவதற்கு இரண்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த நபர்களுக்கே சளி மாதிரி எடுத்து அனுப்புகின்றனர். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இம்மையம் சில நாட்களுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரும்.
ஏற்கெனவே பிசிஆர் பரிசோதனையும் இல்லாத நிலையில், ரேபிட் கிட்களை இந்த கிட்களை பயன்படுத்த வேண்டாம் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளதாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் கரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்காக முதல் கட்டமாக, பி.சி.ஆா். கருவியும், இதன் துணை மருத்துவக் கருவிகள் வரவழைக்கப்படவுள்ளன.
கரோனா பரிசோதனை கருவியை இயக்குவதற்கு சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 3 போ் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். விரைவில் கரோனா பரிசோதனை மையம் ராமநாதபுரத்தில் செயல்பாட்டுக்கு வரும், என்றனர்.
எஸ். முஹம்மது ராஃபி