பூட்டிக்கிடக்கும் பிசிஆர் ஆய்வகம்; பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஐசிஎம்ஆர்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

பூட்டிக்கிடக்கும் பிசிஆர் ஆய்வகம்; பொறுப்பற்ற முறையில் செயல்படும் ஐசிஎம்ஆர்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
Updated on
1 min read

மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி இருந்தும் அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உஇருந்தும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளதை சுட்டிக்காட்டி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுமைக்கும் கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய வேளையில், இந்தியா போதிய அளவிற்கு சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதுகுறித்து பலமுறை பல்வேறு தளங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, "எந்த அளவிற்கு சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்கள் உள்ளனவோ அவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று பதில் சொல்லப்பட்டது.

சோதனை செய்யக்கூடிய ஆய்வகங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தினம் தினம் அரசிடம் வைக்கப்படுகிறது.

ஆனால், மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் பிசிஆர் கருவி உள்ளது. அந்தக் கருவியை இயக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். ஆனாலும் கடந்த இரண்டு மாதமாக அந்த அறைகள் பூட்டியே உள்ளன.

இதை விட ஐசிஎம்ஆரின் அலட்சியத்தை வெளிக்காட்டக்கூடிய விஷயங்கள் ஏதாவது இருக்குமா? இந்த ஆய்வகம் தமிழகத்தில் யானைக்கால் நோய் தொற்றுக்கு எதிராக நிறைய ஆய்வுகளையும் சோதனைகளையும் செய்த முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வகம்.

அதில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர், ஆனால் கொரோனா குறித்த சோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளது ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் .

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினம் அதிகரித்துவருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக சோதனைகளை மேற்கொள்ளுவதன் மூலமே நோய் தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்து நோய் பரவாமல் தடுக்க முடியும்.

எனவே உடனடியாக மதுரையில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் கொரோனாவை கண்டறிவதற்கான சோதனைகளை துவக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

PCR கருவியில் பயன்படுத்த தேவைப்படும் வேதியல் மூலக்கூறுகள் அல்லது ரசாயன பொருட்களை தருவித்து ஆய்வகத்தை செயல்படவைக்கவேண்டும்.

மேலும் புதிய கருவியை வாங்கத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஆய்வகம், மக்களுக்கு அதிகம் தேவைப்படும் காலத்தில் செயல்படாமல் போனால் அந்த ஆய்வகத்தின் பயன் என்ன ?"

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in