Published : 06 May 2014 11:50 AM
Last Updated : 06 May 2014 11:50 AM

பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்கொலை முயற்சி போராட்டம்: சேலத்தில் தொழிலாளியால் 13 மணி நேரம் பரபரப்பு

சேலம் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நீதிமன்ற உத்தரவு படி பணி நிரந்தரம் செய்யக்கோரி 300 அடி உயரத்தில் உள்ள புகைபோக்கி கோபுரத்தில் ஏறி ஒரு தொழிலாளர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 9 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் 13 மணி நேரத்துக்கு பின் தொழிலாளி போராட்டத்தை கைவிட்டார்.

சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள செயில் ரிபேக்டரி நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 120-க்கும் மேற்பட்டவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இதுசம்பந்தமாக தொடரப் பட்ட வழக்கில், ஒப்பந்த தொழிலாளர் களைப் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்பின்னரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த தொழிலாளர் பாலசுப்ரமணியம் என்பவர் நேற்று காலை சுமார் ஆறு மணியளவில் நிறுவனத்தில் உள்ள 300 அடி உயர புகை போக்கி கூண்டில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினமான நேற்று போராட்டம் குறித்து அவரே போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளார். இதனை அறிந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தற்கொலை முயற்சியை கைவிடு வதாக தெரிவித்தார். அவரிடம் ஆர்.டி.ஓ. லலிதாவதி, நிர்வாகத்தினர், போலீஸார் காலை 9 மணியில் இருந்து மாலை வரை பேச்சுவார்த்தை நடத்தினர். பாலசுப்பிரமணியம் 9 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

இதில் கூட்டுறவு சங்கத்தில் தொழிலாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும், பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். பணி நிரந்தரம் கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து 7 மணியளவில் தொழிலாளி பாலசுப்பிரமணியம் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். இதனால் சுமார் 13 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x