Last Updated : 28 Apr, 2020 12:56 PM

 

Published : 28 Apr 2020 12:56 PM
Last Updated : 28 Apr 2020 12:56 PM

மதுரையில் பிரசவ வலியில் தவித்த கர்ப்பிணி: உரிய நேரத்தில் உதவிய காவல் ஆய்வாளர்- பொதுமக்கள், ஆணையர் பாராட்டு

மதுரையில் பிரசவ வலியில் தவித்த கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் உதவிய காவல் ஆய்வாளரை பொதுமக்கள், காவல் ஆணையர் பாராட்டினர்.

மதுரை நகரில் முழு ஊரடங்குஅமலில் உள்ளது. வில்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவ வலியுடன் நேற்று கர்ப்பிணி ஒருவர் வந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்தனர்.

ஆனால், அவரைக் கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டது. பிற வாகன வசதியின்றி அந்த கர்ப்பிணி வலியில் தவித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் பணியில் இருந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் என்பவரிடம் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள் கர்ப்பிணியின் நிலைமையை எடுத்துக்கூறினர்.

காவல் ஆய்வாளர் தனது வாகனத்தில் அந்த கர்ப்பிணியை ஏற்றிக்கொண்டு போய் பத்திரமாக மதுரை அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்க உதவினார்.

ஊரடங்கு காலமென்பதால் தூங்காநகரமான மதுரை மாநகர் முழுவதும் பகலில் கூட ஆள் அரவமற்று அமைதியாக இருக்கிறது. இந்நிலையில் கடினமான சூழ்நிலையில் கர்பிணிக்கு ஓடோடி உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளரை பொதுமக்களும், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதமும் வெகுவாகப் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x