

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்கமாக பெறும் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் ஓராண்டுக்கும், அகவிலைப்படி உயர்வை 2021-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையும் நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஏப்.28) தன் ட்விட்டர் பக்கத்தில், "நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.
மேலும், இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (பி.எஃப்.) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்காக இந்தப் பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?" எனப் பதிவிட்டுள்ளார்.