Published : 28 Apr 2020 07:32 AM
Last Updated : 28 Apr 2020 07:32 AM

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை காலஅவகாசம்: தமிழக அரசு அரசாணை

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மார்ச் வரையுள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரைநீட்டித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்ககடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கான காலஅவகாசம் 3 மாதங்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது கூடுதல் அபராதக் கட்டணம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை சட்டப்படி எடுக்கலாமா என்பது குறித்து கடந்த மார்ச் 30-ம் தேதி அரசிடம் நகராட்சி நிர்வாக ஆணையர் விளக்கம் கோரியிருந்தார். இதுதவிர, மார்ச் 31-ம் தேதியுடன் நிதிஆண்டு முடிவடைந்த நிலையில், ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய வணிக உரிமம் குறித்தும் விளக்கம் கோரியிருந்தார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மார்ச்வரை கட்டப்பட வேண்டிய சொத்துவரி உள்ளிட்ட வரிகள், குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான கட்டணங்களை ஜூன் 30 வரை எவ்வித அபராதமும் இன்றி பெறலாம் என்று அரசு விளக்கம் அளித்தது.

இதைத் தொடர்ந்து, சென்னைமாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வரி மற்றும் கட்டணங்கள், உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு ஜூன் 30 வரை அவகாசம் அளித்துதமிழக அரசு அரசாணையையும் பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x