மதுரையில் கரோனா சமூக பரவலாவதைத் தடுக்க உழவர் சந்தைகள் மூடப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி

மதுரையில் கரோனா சமூக பரவலாவதைத் தடுக்க உழவர் சந்தைகள் மூடப்படுமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி
Updated on
1 min read

தமிழகத்தில் ‘கரோனா’ சமூக பரவல் ஆகாமல் இருப்பதைத் தடுக்க தற்காலிகமாக அனைத்து உழவர் சந்தைகளையும் மூட வேண்டும் என்றும், அங்கு வரும் காய்கறிகளை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் 110 உழவர்சந்தைகள் செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 7 உழவர்சந்தைகள் செயல்படுகின்றன.

மாநகராட்சிப்பகுதியில் ஆணையூர், பழங்காநத்தம், சொக்கிகுளம், அண்ணாநகர் ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. முழுஊரடங்கு செயல்படுவதற்கு முன் மதுரை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் செயல்பட்டன. பொதுவாக மற்ற சில்லறை காய்கறிகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை குறைவாகவும், தரமாகவும் இருக்கும். அதனால், மக்கள் உழவர் சந்தைகளிலே கூட்டம், கூட்டமாக காய்கறி வாங்க குவிவது வழக்கம்.

பீபீ குளம் உழவர் சந்தையில் தினமும் 2 கி.மீ, முதல் 4 கி.மீ., வரிசையில் மக்கள் நின்று காய்கறி வாங்கி செல்கின்றனர். இதுபோல் அனைத்து உழவர் சந்தைகளிலும் மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

தற்போது இந்த உழவர்சந்தைகள் செயல்பட்ட பகுதிகளில் ‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால், தற்காலிகமாக ‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்ட உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூரில் உழவர் சந்தைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் முழு ஊரடங்கால் தற்காலிகமாக மட்டுமே இந்த 4 நாட்களுக்கு உழவர்சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

முழு ஊரடங்கிற்கு பிறகு இந்த உழவர்சந்தைகள் செயல்பட வாய்ப்புள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் உழவர்சந்தைகளுக்கு காய்கறி வாங்க வர வாய்ப்புள்ளது.

அவர்கள் மூலம் சந்தைக்கு வரும் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால், தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று பரவல் நிற்கும் வரை உழவர் சந்தைகளை மூட வேண்டும் என்றும் மாற்று ஏற்பாடாக நடமாடும் கடைகள் மூலம் உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகளை விவசாயிகள் அல்லது வியாபாரிகளை கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு தேடிச்சென்று காய்கறிகளை விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ‘‘மக்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால், காய்கறி வாங்க வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறிகள் விலை கூட்டி வைத்து விற்றனர்.

மேலும், பெரும்பாலான குடியிருப்புகளுக்கு நடமாடும் காய்கறி கடைகள் வருவதில்லை.

அதனால், மக்கள் உழவர்சந்தைகளுக்கு வர வேண்டிய கட்டாயம் உள்ளது. நோய் தொற்று பரவதை முழுமையாக தடுக்க மக்களுக்கு வீடு தேடிச் சென்று காய்கறி வழங்கவதை உறுதி செய்ய வேண்டும்.

நோய் தொற்று முற்றிலும் இல்லாத நிலை வரும்வரை தற்காலிகமாக உழவர் சந்தைகளை மூட வேண்டும், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in