வீடு, வீடாகச் சென்று இலவச மருத்துவம்: காரைக்குடி மருத்துவரின் கனிவுக்கு குவியும் பாராட்டு

வீடு, வீடாகச் சென்று இலவச மருத்துவம்: காரைக்குடி மருத்துவரின் கனிவுக்கு குவியும் பாராட்டு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர் ஒருவர் வீடு, வீடாகச் சென்று இலவச மருத்துவ சேவை அளித்து வருகிறார். மேலும் அவர் ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் பலரும் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த தீவர அவசர சிகிச்சை மருத்துவர் குமரேசன் தன்னை அழைப்பவர்களுக்கு வீடு, வீடாகச் சென்று இலவச சிகிச்சை அளித்து வருகிறார்.

மேலும் தினமும் ஆன்லைனில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இதுதவிர காரைக்குடி பகுதிகளில் உணவின்றி சிரமப்படும் மக்களுக்கு மளிகைப் பொருட்களும் வழங்கி வருகிறார். இதனால் மருத்துவர் குமரேசனை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் குமரேசன் கூறியதாவது: பல இடங்களில் மருந்துக் கடைகள் இருந்தாலும் மருத்துவமனைகள் திறக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கிறேன். மேலும் ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும் அளிக்கிறேன்.

பலருக்கு சாதாரண இருமல் வந்தாலே கரோனா இருக்குமோ என்ற அச்சம் உள்ளது. அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, நோய் தீவிரம் உள்ளவர்களை மட்டுமே மருத்துவர்களை அணுக அறிவுறுத்துகிறேன்.

7708251313 -ல் என்னை அழைத்தால் நிச்சயம் ஆலோசனை வழங்குவேன். அவசர காலத்தில் என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன். மேலும் எனது நண்பர்கள் மூலம் காரைக்குடி ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளேன்.

அதன்மூலம் இலவசமாக மருந்துப் பொருட்கள், மளிகைப் பொருட்களை வழங்கி வருகிறோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in